Archives: நவம்பர் 2022

எச்சரிப்பின் சப்தங்கள்

நீங்கள் எப்போதாவது ஒரு விரியன் பாம்பினை அருகில் பார்த்ததுண்டா? அப்படியானால், நீங்கள் அருகில் செல்லும்போது, அதின் சத்தம் மிகவும் உக்கிரமாக இருப்பதை கவனித்திருக்கக்கூடும். ஆபத்துகள் தன்னை நெருங்கும்போது, பாம்புகள் பொதுவாக சத்தமிடும் வீரியத்தை அதிகப்படுத்துகின்றன என்ற ஆராய்ச்சி சொல்லுகிறது. இந்த அதிர்வலைகள், அவைகள் இருக்கவேண்டிய இடத்தைக் காட்டிலும் மிக நெருக்கமாக இருக்கின்றன என்பதை அவைகளுக்கு தெரியப்படுத்துகின்றன. ஒரு ஆராய்ச்சியாளர், “கேட்பவர் தவறான எல்லைக்குள் வந்துவிட்டதாக, தனக்கு ஒரு பாதுகாப்பு விளிம்பை ஏற்படுத்திக்கொள்கிறது" என்று சொல்லுகிறார். 

சண்டையிடும்போது, மற்றவர்களை திட்டும் கடுமையான வார்த்தைகளை பிரயோகிக்கும்போது, அதிக ஓசை எழுப்பக்கூடும். இதுபோன்ற தருணங்களுக்கு உகந்த வகையில் நீதிமொழிகளின் ஆசிரியர் ஞானமான ஆலோசனைகளைக் கொடுக்கிறார்: “மெதுவான பிரதியுத்தரம் உக்கிரத்தை மாற்றும்; கடுஞ்சொற்களோ கோபத்தை எழுப்பும்” (நீதிமொழிகள் 15:1). மேலும் மென்மையான பதில், “ஜீவவிருட்சம்” என்றும் “அறிவை இறைக்கும்” (வச. 4,7) என்றும் சொல்லுகிறார். 

நாம் யாருடன் சண்டையிடுகிறோமோ, அவர்களிடம் தன்மையாய் பேசுவதற்கான முக்கியமான காரணத்தை இயேசு சொல்லுகிறார்: நாம் அவருடைய பிள்ளை என்பதை வெளிப்படுத்தும் அன்பை பிரதிபலிப்பதின்; மூலமாகவும் (மத்தேயு 5:43-45) மற்றும் நல்லிணக்கத்தைத் தேடுதலின் மூலமாகவும் (18:15) அது சாத்தியமாகும். சச்சரவுகளின் போது நம் குரலை உயர்த்தியோ அல்லது கனவீனமான வார்த்தைகளைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, தேவன் தம்முடைய ஆவியின் மூலம் நம்மை வழிநடத்துவது போல் மற்றவர்களுக்கு நாகரீகம், ஞானம் மற்றும் அன்பைக் காட்டுவோம்.

சூடான உணவு

பார்பிக்யூ கோழி இறைச்சி, பீன்ஸ், பாஸ்தா, ரொட்டி. ஒரு அக்டோபர் மாதத்தில் தன்னுடைய 54ஆம் பிறந்த நாளை கொண்டாடும் ஒரு பெண்மணியிடமிருந்து 54 ஆதரவற்றவர்கள் இந்த உணவை பரிசாகப் பெற்றுக்கொண்டனர். அந்தப் பெண்ணும் அவளுடைய நண்பர்களும், ஒரு உணவகத்தில் தங்கள் விருந்தை வழக்கமாய் அநுசரிக்காமல், சிகாகோவின் தெருக்களில் உள்ள ஆதரவற்ற மக்களுக்கு உணவை சமைத்து பரிமாற தீர்மானித்தனர். மேலும் சமூக வலைதளங்கள் மூலமாக, மற்றவர்களையும் அவர்கள் பிறந்த நாளுக்கு அதுபோல காரியங்களை செய்யும்படி ஊக்குவித்தாள். 

இந்த சம்பவம், மத்தேயு 25-ல் இடம்பெற்றள்ள இயேசுவின் வார்த்தைகளை எனக்கு நினைவூட்டுகிறது: “அதற்கு ராஜா பிரதியுத்தரமாக: மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார்” (வச. 40). அவருடைய ஆடுகள் தங்கள் சுதந்திரத்தை அடையும்படிக்கு தன்னுடைய நித்திய இராஜ்யத்திற்குள் அழைக்கப்படும் என்று சொன்ன பிறகே இந்த வார்த்தைகளைச் சொன்னார் (வச. 33-34). அந்த தருணத்தில், அவர்கள் மெய்யான விசுவாசத்தில் அவருக்கு உணவளித்து, உடுத்தியவர்கள் என்பதை ஒப்புக்கொள்வார் (அவரை நம்பாத பெருமையுள்ள மதவாதிகளைப் போலல்லாமல்; பார்க்கவும் 26:3-5). நாங்கள் எப்போது உங்களுக்கு உணவளித்து, உடுத்துவித்தோம் என்று “நீதிமான்கள்” அவரைப் பார்த்துக் கேட்பார்கள் (25:37). “மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள்” (வச. 40) என்று பதிலளிப்பார். 

என்னோடு நட!

சில ஆண்டுகளுக்கு முன்பு, “இயேசு என்னுடன் நடக்கிறார்" என்ற பாடலை நற்செய்தி பாடகர் ஒருவர், பாடகர் குழுவுடன் பாடி, பிரபலமாக்கினார். அந்த பாடலின் வரிகளுக்குப் பின்னால் ஒரு அழகான கதை உள்ளது.

ஜாஸ் இசைக்கலைஞர் கர்டிஸ் லுண்டி, அவர் போதை மருந்து மறுவாழ்வு சிகிச்சையில் இணையும்போது, ஒரு பாடகர் குழுவைத் துவங்கினார். தன்னோடு சிகிச்சை பெற்ற சக நோயாளிகளை ஒன்றாக இணைத்து, அவர்களுக்கு ஒரு பழைய பாடலின் மீது இருக்கும் தாகத்தை அடிப்படையாய் வைத்து இந்த புதிய பாடலை அவர்களுக்காக இயற்றினார். “நாங்கள் எங்கள் வாழ்க்கைக்காய் பாடினோம்; இந்த போதைப் பழக்கத்திலிருந்து எங்களை முற்றிலும் விடுவிக்கும்படியாய் கிறிஸ்துவிடம் பாடினோம்” என்று அக்குழுவினர் ஒரு உறுப்பினர் ஒருவர் சொன்னார். மற்றொருவர் அந்த பாடலைப் பாடியபோது, அவளுடைய தீராத வலி தணிந்ததை சாட்சியிட்டார். அந்த பாடகர் குழு, தாளில் எழுதப்பட்டிருந்த வெறும் வார்த்தைகளை உச்சரிக்கவில்லை; மாறாக, மீட்கப்பட்ட வாழ்க்கைக்கான ஜெபத்தை ஏறெடுத்தனர். 

இன்றைய வேத வாசிப்பு அவர்களின் அனுபவத்தை நன்றாக விவரிக்கிறது. கிறிஸ்துவின் மூலம், எல்லா ஜனத்திற்கும் இரட்சிப்பை கொடுப்பதற்காக தேவன் வெளிப்பட்டார் (தீத்து 2:11). நித்திய வாழக்;கை என்பது இந்த பரிசின் ஒரு வெளிப்பாடாய் இருக்கையில் (வச. 13), நம்முடைய சுயக்கட்டுப்பாட்டை திரும்பப் பெற்றுக்கொள்வதற்கும், உலக ஆசைகளை புறக்கணிப்பதற்கும், அவரோடு சேர்ந்து வாழும் வாழ்க்கைக்கு நம்மை மீட்டெடுக்கவும் தேவன் நம்மில் கிரியை செய்கிறார் (வச. 12, 14). அந்த பாடல் குழுவினர் கண்டறிந்தபடி, இயேசு நம் பாவங்களை மட்டும் மன்னிக்கவில்லை, நம்மை அழிவுக்கேதுவான வாழ்க்கை முறைகளிலிருந்தும் விடுவிக்கிறார். 

இயேசு என்னோடு நடக்கிறார். அவர் உங்களுடனும் நடக்கிறார். அவரை தேடுகிற யாவரோடும் அவர் நடக்கிறார். இப்போது இரட்சிப்பை அருளுவதற்கும், எதிர்காலத்தின் நம்பிக்கையை அருளுவதற்கும் அவர் நம்மோடு இருக்கிறார்.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

விண்வெளி பந்தயம்

ஜூன் 29, 1955 இல், அமெரிக்கா செயற்கைக்கோள்களை விண்வெளியில் அமைக்கும் திட்டத்தை அறிவித்தது. விரைவில், சோவியத் யூனியனும் அதைச் செய்வதற்கான திட்டங்களை அறிவித்தது. விண்வெளிக்கான பந்தயம் தொடங்கியது. சோவியத், முதல் செயற்கைக்கோளை (ஸ்புட்னிக்) ஏவியது மற்றும் யூரி காகரின் நமது கிரகத்தை ஒரு முறை சுற்றி வந்தபோது, முதல் மனிதனையும் விண்வெளியில் செலுத்தியது. ஜூலை 20, 1969 அன்று, நிலவின் மேற்பரப்பில் நீல் ஆம்ஸ்ட்ராங்கின் “கால்தடம்” போட்டியை அதிகாரப்பூர்வமற்ற முறையில் முடிக்கும் வரை இந்த பந்தயம் நீடித்தது. இனைந்து பணியாற்றும் காலம் விரைவில் உதயமானது, இது சர்வதேச விண்வெளி நிலையத்தை உருவாக்க வழிவகுத்தது.

சில நேரங்களில் போட்டி ஆரோக்கியமானதாக இருக்கலாம், அது நாம் முயற்சி செய்யாத விஷயங்களைச் சாதிக்க நம்மைத் தூண்டுகிறது. இருப்பினும், மற்ற நேரங்களில், போட்டி அழிவுகரமானது. கொரிந்துவில் உள்ள சபையில் இது ஒரு பிரச்சனையாக இருந்தது, ஏனெனில் வெவ்வேறு குழுக்கள் பல்வேறு சபை தலைவர்களை தங்கள் நம்பிக்கையின் கலங்கரை விளக்கங்களாகப் பற்றிக்கொண்டன. இதனைச் சமாளிக்க பவுல், “நடுகிறவனாலும் ஒன்றுமில்லை, நீர்ப்பாய்ச்சுகிறவனாலும் ஒன்றுமில்லை, விளையச்செய்கிற தேவனாலே எல்லாமாகும்” (1 கொரிந்தியர் 3:7) என்று எழுதியபோது, “நாங்கள் தேவனுக்கு உடன்வேலையாட்களாயிருக்கிறோம்” (வ.9) என்று நிறைவு செய்தார்.

உடன்வேலையாட்கள்; போட்டியாளர்கள் அல்ல. மேலும் ஒருவருக்கொருவர் மட்டுமல்ல, தேவனோடும்! அவருடைய அதிகாரம் மற்றும் அவரது வழிகாட்டுதலின் மூலம், இயேசுவின் செய்தியை முன்னெடுத்துச் செல்ல உடன்வேலையாட்களாக நாம் ஒன்றுசேர்ந்து பணியாற்றலாம், நம்முடையதை காட்டிலும் அவருடைய மகிமைக்காக. 

 

புதிதாக வாழுதல்

ஒரு பள்ளியின் சிறந்த மாணவர்கள் கல்விச் சாதனைக்கான சான்றிதழைப் பெற்றபோது கைதட்டல்கள் முழங்கின. ஆனால் அதோடு நிகழ்ச்சி முடிவடையவில்லை. அடுத்த விருது பள்ளியின் “சிறந்த” மாணவர்கள் அல்ல, மாறாக மிகவும் மேம்பட்ட மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. இவர்கள் தோல்வியடைந்த பாடத்தில் முன்னேற, சீரழிக்கும் நடத்தையை மாற்றிக்கொள்ள அல்லது வகுப்புக்கு தவறாமல் வருகை தரக் கடினமாக உழைத்தவர்கள். அவர்களின் பெற்றோர்கள் மகிழ்ச்சியடைந்து கைதட்டி, தங்கள் பிள்ளைகள் உயர்ந்த பாதைக்குத் திரும்பியதை ஏற்றுக்கொண்டனர். அவர்களின் முந்தைய குறைபாடுகளைப் பார்க்காமல் அவர்கள் புதிய பாதையில் நடப்பதைக் கண்டனர்.

நமது பழைய வாழ்க்கையை அல்ல, இப்போது கிறிஸ்துவில் அவருடைய பிள்ளைகளாக நம்மை நம்முடைய பரலோகத் தகப்பன் எப்படிப் பார்க்கிறார் என்பதைச் சிறிய கற்பனையாகச் சிந்திக்க வைக்கும் காட்சியாக இது அமைந்திருந்தது. “அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்” (யோவான் 1:12) என்று யோவான் எழுதினார்.

என்ன ஒரு அன்பான நோக்கம்! எனவே பவுல், “அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்தவர்களாயிருந்(தீர்கள்)த” (எபேசியர் 2:1) என்று புதிய விசுவாசிகளுக்கு நினைவூட்டினார். ஆனால் உண்மையில், “நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம்; அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம்பண்ணியிருக்கிறார்” (வ.10).

இதேபோல பேதுருவும், நம்மைக்குறித்து “நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள்” என்றும் முன்னே நீங்கள் தேவனுடைய ஜனங்களாயிருக்கவில்லை, இப்பொழுதோ அவருடைய ஜனங்களாயிருக்கிறீர்கள்(1 பேதுரு 2:9-10) என்றும் எழுதினார். தேவனின் பார்வையில், நம்மீது நமது பழைய வாழ்க்கைக்கு அதிகாரமில்லை. தேவன் பார்ப்பது போல் நாமும் நம்மைப் பார்ப்போம், புதிய வாழ்வில் நடப்போம். 

 

மனந்திரும்பும் இருதயம்

ஒரு நண்பர் தனது திருமண உறுதிமொழியை மீறினார். அவரே தனது குடும்பத்தை அழிப்பதைப் பார்ப்பது வேதனையாக இருந்தது. அவர் தனது மனைவியுடன் சமரசம் செய்ய முயன்றபோது, என்னிடம் ஆலோசனை கேட்டார். அவர் வார்த்தைகளில் அல்ல செயல்களில் காட்ட வேண்டுமென்றும்; தனது மனைவியை நேசிப்பதிலும் பாவத்தின் எந்த வடிவத்தையும் அகற்றுவதில் முனைப்புடன் இருக்க வேண்டும் என்று நான் அவரிடம் சொன்னேன்.

கர்த்தருடன் செய்த உடன்படிக்கையை மீறி அந்நிய தேவர்களைப் பின்பற்றியவர்களுக்கு எரேமியா தீர்க்கதரிசி இதே போன்ற ஆலோசனை வழங்கினார். அவரிடம் திரும்புவது நல்ல துவக்கமாக இருந்தாலும், அது மட்டும் போதாது (எரேமியா 4:1). அவர்கள் சொல்லோடு அவர்கள் செயல்களையும் இசைவாகச் சீரமைக்க வேண்டும். அது அவர்களின் “அருவருப்பான விக்கிரகங்களை” அகற்றுவதைக் குறிக்கிறது (வ. 1). எரேமியா, அவர்கள் “உண்மையோடும், நியாயத்தோடும், நீதியோடும்” அர்ப்பணித்தால், தேவன் தேசங்களை ஆசீர்வதிப்பார் என்றார் (வ. 2). மக்கள் வெற்று வாக்குறுதிகளை அளிப்பதுதான் பிரச்சனை. அவர்களின் இருதயம் அதிலே இல்லை.

தேவனுக்கு வெறும் வார்த்தைகள் வேண்டாம்; அவருக்கு நம் இருதயங்கள் வேண்டும். இயேசு கூறியது போல், “இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும்” (மத்தேயு 12:34). அதனால்தான், எரேமியா தனக்குச் செவிகொடுப்பவர்களை “நீங்கள் முள்ளுகளுக்குள்ளே விதையாதிருங்கள், உங்கள் தரிசு நிலத்தைப் பண்படுத்துங்கள்” (எரேமியா 4:3) என்று ஊக்கப்படுத்துகிறார்.

கவலைப்படத்தக்கதாக, பலரைப் போலவே, எனது நண்பரும் சரியான வேதாகம அறிவுரைகளுக்குச் செவிசாய்க்கவில்லை, அதன் விளைவாக அவரது திருமண வாழ்வை இழந்தார். நாம் பாவம் செய்யும்போது, அதை ஒப்புக்கொண்டு அதிலிருந்து திரும்ப வேண்டும். தேவனுக்கு வெற்று வாக்குறுதிகள் வேண்டாம்; அவருடன் உண்மையிலேயே இசைந்திருக்கும் ஒரு வாழ்க்கையை விரும்புகிறார்.